கொரோனா வைரஸ் – 144 தடை – இணைய வேகம் எப்படி இருக்கும் ?
Internet Speed during the Curfew – Coronavirus – Covid-19
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலகளவில் (இந்திய நேரப்படி காலை 8 மணி) 3.78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 16,514 மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.02 லட்சம் பேர். நம் நாட்டில் இதுவரை 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் முக்கியமானது நமது மதுரை மாநகரிலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய பங்குச்சந்தையில் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை இரண்டு குறியீடுகளும் சுமார் 13 சதவீத வீழ்ச்சியை சந்தித்தன. நாட்டின் இரு சந்தைகளும் நடப்பு வருடத்தில் 37 சதவீத இறக்கத்தை கண்டுள்ளன. கொரோனா வைரஸ்(Coronavirus) எதிரொலியால் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தினசரி வணிகத்தை மேற்கொள்ள முடியாமல் நோயின் பரவலை தடுக்க, தொழில் புரிவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ரயில்களும், பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்த படியே, தொழில் சேவைகளை அளிக்கும் படி கேட்டு கொண்டுள்ளது.
வீட்டிலிருந்து தொழில் சேவைகளை அளிக்கும் ஊழியர்களுக்கு பெரும்பாலும் தேவைப்படுவது இணைய பயன்பாடு மட்டுமே. நாட்டில் சுமார் 6 கோடிக்கும் அதிகமான இணைய பயன்பாட்டாளர்கள் உள்ளனர். சில ஊழியர்கள் தங்கள் நிறுவன சேவைக்காக பிராண்ட் பேண்ட் சேவைகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
நமது நாட்டை பொறுத்தவரை கைபேசி வழியிலான இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை தான் அதிகமாக காணப்படுகிறது. தற்போதைய நிலையில் 3 ஜி மற்றும் 4 ஜி பயன்பாட்டு சேவை திருப்திகரமாக இருந்தாலும், வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்களும் தங்கள் இணைய வேகத்தை(Data Speed) அதிகரிக்க வேண்டிய சூழல் உள்ளது.
பொது ஐ.டி. சேவை, இணைய வழியிலான வங்கி மற்றும் நிதி சேவை, மருத்துவ சேவை, இதர கட்டாய தேவைகளுக்கு துரிதமான இணையம் அவசியமாகிறது. வரவிருக்கும் நாட்களில் இணைய பயன்பாட்டுக்கான சலுகைகளும் அறிவிக்கப்படலாம். தேவை அதிகரிக்கும் நிலையில், இணைய பயன்பாட்டுக்கான கட்டணத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. இது போன்ற அவசர காலங்களில் கட்டணம் அதிகரிக்கப்படுமா என்பதனை காட்டிலும், ஏற்கனவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு வழக்கு ஒன்றில் உள்ளது.
அனைவரும் வீட்டில் அமர்ந்திருக்கும் இது போன்ற காலங்களில் இணைய பயன்பாடு மற்றும் தொலைக்காட்சியை தான் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். எனவே, அவசியமில்லாத இணைய பயன்பாட்டை சிலர் தவிர்க்கும் பட்சத்தில், அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்துபவர்களால் சரியான நேரத்தில் சேவைகளை அளிக்க இயலும். இதனை நாம் மீறும் பட்சத்தில், டெலிகாம் நிறுவனங்களின் புதிய கட்டணத்திற்கு தள்ளப்பட வேண்டியிருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ள யாருக்கெல்லாம் இணைய சேவை அவசியமாகிறதோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். பொழுது போகவில்லை என்றால், உங்களுக்கு பிடித்த விஷயங்களை வீட்டிலிருந்தே செய்ய பழகுங்கள். உங்கள் வீட்டு தோட்டத்தை பராமரிப்பது, புதிய புத்தகங்களை படிப்பது, சில திட்டங்களை வடிவமைப்பது(Home based Online Business), ஏற்கனவே செய்ய வேண்டிய வீட்டு வேலைகள் சில இருப்பின் அவற்றை இப்போது செய்யுங்கள். அதே வேளையில் இணையம் வழியாக சம்பாதிக்கிறேன் என மோசடி பேர்வழிகளிடம் மாட்டி கொள்ளாதீர்கள்.
நேரத்திற்கு சாப்பிடுங்கள். போதுமான உறக்கம் அவசியம். நோயினை எதிர்கொள்ள பாரம்பரிய உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். சமைக்க பழகுவதற்கான நேரமும் இப்போது உள்ளது.
வீட்டில் இருங்கள், அதனை விட தனிமையில் இருப்பது அவசியமாகும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை