பொருளாதார மந்தநிலை – கச்சா எண்ணெய் வீழ்ச்சி – பெட்ரோல் மட்டும் ஏன் குறையவில்லை ?
Economic Recession – Crude Oil Fall below $30 – Why not just Fuel Prices ?
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை பிப்ரவரி மாதத்தின் முடிவில் 9.85 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 9.72 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதி(Exports) 27,650 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதியில்(Imports) 37,500 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது. சொல்லப்பட்ட 9.85 பில்லியன் டாலர்கள் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 72,850 கோடி !
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாட்டின் இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. நாம் சீனாவிலிருந்து 15 சதவீத இறக்குமதியை மேற்கொள்கிறோம். இதன் மதிப்பு சுமார் 73 பில்லியன் டாலர்களுக்கு மேல். அமெரிக்காவிலிருந்து 6.5 சதவீதமும், சவூதி அரேபியாவிலிருந்து 5.7 சதவீதமும் மற்றும் ஐக்கிய அரபு நாட்டிலிருந்து 5.4 சதவீத இறக்குமதியை கையாள்கிறோம்.
ஈராக் மற்றும் இரான் நாட்டின் பங்களிப்பு முறையே 4.9 சதவீதம் மற்றும் 3 சதவீதமாக உள்ளது. நம் நாட்டின் மொத்த இறக்குமதியில் எரிபொருட்களின் பங்கு மட்டும் 33 சதவீதமாகும். இதன் மதிப்பு சுமார் 169 பில்லியன் டாலர்கள். இதற்கு அடுத்தாற் போல், முத்துக்கள், விலை உயர்ந்த உலோகங்கள், கற்கள் ஆகியவற்றின் பங்களிப்பு 13 சதவீதமாக உள்ளது. மின் மற்றும் மின்னணு உபகரணங்களின் இறக்குமதி 10 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
நமது இறக்குமதியில் பெரும்பாலும் கச்சா எண்ணெய் மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் மதிப்பு தான் அதிகமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக பேசப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தாக்குதலின் இடையே, பெரும்பாலானோர் கச்சா எண்ணெய் விலை(Crude Oil Prices) நிலவரங்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தற்போது அமெரிக்க கச்சா எண்ணெய்(WTI Crude) பேரலுக்கு 27 டாலர்களுக்கு குறைவாகவும், மற்றொரு சந்தையில் ப்ரெண்ட் குறியீடு பேரலுக்கு 31 டாலர்களுக்கு குறைவாக வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.
நடப்பு வருடத்தில் மட்டும் கச்சா எண்ணெயின் விலை 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது கவனிக்கத்தக்கது. இது கடந்த நான்கு வருடங்களில் காணப்பட்ட குறைந்த அளவாக சொல்லப்படுகிறது. உண்மையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, நம் நாட்டிற்கு சாதகமாக இருந்திருக்க வேண்டும். உண்மையில் இங்கு உள்ள சாமானியனுக்கு இது நன்மையை அளித்ததா ?
கடந்த 2008ம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியின் போது, கச்சா எண்ணெய் விலை 70 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. 2008ம் ஆண்டில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.45 – 50 என்ற அளவில் இருந்தது. அப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 92 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகி கொண்டிருந்தது.
நம் நாட்டில் அரசின் வருவாய் பெரும்பாலும் வரிகளை சார்ந்து தான் உள்ளது. அதே வேளையில் ஈட்டப்படும் வரி வருவாய் முறையாக செலவழிக்கப்படுகிறதா, அது அடித்தட்டு மக்கள் மற்றும் வரியை செலுத்துபவருக்கு பயனளிக்கிறதா என்பதே நடுத்தர மக்களின் கேள்வி ? அரசும் நிதி பற்றாக்குறையை(Fiscal Deficit) காரணம் காட்டி, எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் கொண்டு வரவில்லை. நடப்பில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், அரசு எரிபொருட்களுக்கான சுங்க வரியை (Excise Duty) லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி உள்ளது. இதன் மூலம் அரசின் வருவாய் 39,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்தும், அதன் பலன் சாமானியனை அடையவில்லை என்பது உண்மையில் வருத்தமளிக்க கூடிய விஷயம் தான். உதாரணமாக கடந்த வாரம் சனிக்கிழமை அன்று (14, மார்ச், 2020) கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 35 அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஒரு பேரல் 159 லிட்டர் எனும் போது, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 2,588 ஆக உள்ளது. அன்றைய டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 73.96. அப்படி பார்க்கும் போது, ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 16.27 !
ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்க்கு ஆகும் உற்பத்தி செலவு ரூ. 12.20. (அடிப்படை வரி, இறக்குமதி செலவு, போக்குவரத்து, எண்ணெய் நிறுவனங்களின் லாபம் உட்பட) எனவே, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி ரூ. 28.47 ஆக உள்ளது. இதற்கு அடுத்தாற் போல், மத்திய அரசு தனது வரியாக சுங்க வரி மற்றும் சாலை வரியை விதிக்கிறது. இதன் செலவு லிட்டருக்கு ரூ. 23. பெட்ரோல் பம்புகளின் கமிஷன் ரூ. 3.50 ஆகும். இவை அனைத்தையும் சேர்த்து இப்போது பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 55 ரூபாயாக வந்து சேரும். இந்த விலை சாமானியனுக்கு கிடைத்திருந்தால் பரவாயில்லை.
சொல்லப்பட்ட பெட்ரோலின் விலைக்கு மாநில அரசு சார்பில் அதிகபட்சமாக 27 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். இது போக மாசு வரி 25 பைசா என கணக்கிடப்படுகிறது. ஆக மொத்தம் 14 மார்ச் அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 70 ஆக உள்ளது. அப்போதைய கணக்கீட்டின் படி, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 62.58. இது நாட்டின் தலைநகரமான டெல்லியின் விலை நிலவரம்.
கடந்த 2014ம் ஆண்டில் ரூ. 9.20 ஆக இருந்த சுங்க வரி, நடப்பில் 22.98 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது நாம் செலுத்தும் ஒரு லிட்டருக்கான பெட்ரோல் விலையில் 54 சதவீதம் வரி மட்டுமே உள்ளது. எரிபொருட்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் வரி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமா ?
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை