மகளிர் தின முதலீட்டு சிந்தனைகள் – மார்ச் 8, 2020
International Women’s Day 2020 – Investment Thoughts
மார்ச் 8ம் தேதியான இன்று உலக மகளிர் தினமாக(Women’s Day T20) ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இது பெண்கள் உரிமைகளுக்கான மைய புள்ளியாகவும் பார்க்கப்படுகிறது. பெண்கள் இந்நாட்டின் கண்கள் – பொருளாதாரத்திலும் தான். பெண்கள் தொழில்முனைவிலும், முதலீட்டிலும் பங்கு பெறும் போது மட்டுமே, அது அவர்களின் எண்ணங்களும், அவர்களை சார்ந்த சமூகமும் மேம்படும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பெண் விடுதலை வேண்டும், அது நிதி சுதந்திரத்திலும் சாத்தியமே. வெறுமனே ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலைக்கு செல்வதில் பெருமை அல்ல நம் உள்ளுணர்வு, மாறாக வேலைவாய்ப்புகளை தருவதிலும் பெண்கள் நேர் காண வேண்டும். ‘ சிறு சேமிப்பு ‘ என்ற ஒற்றை கூற்று பெண்களை மட்டுமே சேரும் என்பதனை மறுப்பதற்கில்லை.
பெண்கள் முன்னேற்றத்திற்கான என்னால் முடிந்த சிறு முயற்சி – சில சிந்தனைகளில்… இதோ
- நீங்கள் கற்ற கல்வி உங்கள் குடும்பத்தை மட்டுமில்லாமல், பெண் சுதந்திரம் வேண்டும் அனைவருக்குமான துணையாக இருக்கட்டும். வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல், உங்கள் அருகில் உள்ளவர்களை இணைத்து தொழில்முனைவை(Entrepreneurship) உருவாக்குங்கள். வேலையை தேடுவதற்கு பதிலாக, நீங்களே பலரை வேலைக்கு நியமிக்கும் அளவுக்கு முன்னேறுங்கள். இதோ இங்கு அனைத்தும் சாத்தியமே – இணையமும் உங்கள் மருதாணியிட்ட விரல்களில்.
- சிறு சேமிப்பிலிருந்து சில்லரை வணிகம் வரை உனக்கான வாய்ப்பு இப்போது உள்ளது. ‘Whatsapp’ உன்னை போன்ற தோழிகளை தொழில் ரீதியாக இணைப்பதற்கே. முகநூலில் உன் எண்ணமுகம் பதிந்து, மற்றவர்களுக்கும் உதவ முன் வா (Social Networking) பெண்ணே.
- முதலீட்டு உத்தியை உன் முன்னேற்றத்திற்கு பயன்படுத்து. சுருக்கு பையில் சில்லரை காசுகளை போடத்தெரிந்த என் அம்மாச்சி, அப்பத்தாவுக்கு பரஸ்பர நிதிகளும், பங்குச்சந்தையும்(Mutual Funds & Stock Market) பழக்கப்பட்டவை தான். பணவீக்கத்தை சரிசெய்ய உன் சேமிப்பை சிறப்பானதாக்கு.
- உன் கணவனின் சரி பாதி நீ – வீட்டு பட்ஜெட் கணக்கிலும்(Budget Planning) உன் திறமையை காட்டு. பிள்ளைகளுக்கு சேமிப்பதற்கும், முதலீட்டிற்கும்(Savings vs Investing) உள்ள வித்தியாசத்தை சொல்லி தா. நீ இல்லாமல் ஒரு அணுவும் அசையாது – மாத எஸ்.ஐ.பி. முதலீட்டை நீயே துவக்கி வை. காப்பீட்டின் முக்கியத்துவத்தை உன் கணவனுக்கு புரிய வை, நமக்கும் பிள்ளைகள் இருக்கிறதென்று.
- வேலை கொடுப்பதை பெருமையாக எண்ணு, வேலைக்கு செல்வதை வீணாக எண்ணாதே. உனக்கான சேமிப்பை இப்போதே உருவாக்கு, அதே வேளையில் நீ தான் உன் குடும்பத்தின் அவசர கால நிதி(Emergency Fund) என்பதை இப்போதே உணர்த்து.
- வாழ்நாள் முழுவதும் நீ சுதந்திரமாக வாழ வேண்டுமா ? தலைமைப்பண்பே(Leadership) உனது தாரக மந்திரமாக கொள். குடும்பமும், சமுதாயமும் உனது இரு கண்கள். நீ இருந்தால் மட்டுமே அது சுகமாகும் சாத்தியம்.
சிறு வயதில், என்னுடன் விளையாடிய அவளது(தங்கை) தருணங்கள்… இப்போது நான் என் மகளுடன் விளையாடி கொண்டிருக்கும் மழலை எண்ணங்கள். மழலையின் அழகே அன்பின் அழகு, அதுவே பெண்ணின் அழகு !
- நா. சரவணகுமார், நிதி மருத்துவர்(ஆலோசகர்), வர்த்தக மதுரை
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை