நாட்டின் வங்கி வட்டி விகிதம் – ஒரு சிறு பார்வை
Bank Interest Rate in India – A Short look
கடந்த டிசம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம்(Retail Inflation) 7.35 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது போல கடந்த 2019 செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) 4.5 சதவீதமாக இருந்தது. டிசம்பர் மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.60 சதவீதமாக உள்ளது. பொதுவாக நாட்டின் பணவீக்கம் உயர்ந்தும், பொருளாதார வளர்ச்சி மந்த நிலை காண்பதும் மற்றும் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பது – இந்த மூன்று நிலையும் ஒரு சேர நிகழ்வதை தேக்கநிலை(Stagflation) என்பர்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த நிலை தொடர்ந்து நிகழ்ந்து வந்தால், அது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே அதனை மீட்டெடுப்பதே ஒரு நாட்டின் அரசுக்கான கடமையாக சொல்லப்படுகிறது. பொருளாதார மந்த நிலையில், ஒரு நாட்டின் வட்டி விகிதம் முக்கியத்துவம் வாய்ந்தது. வட்டி விகித மாற்றங்கள் பொருளாதார கதையில் முக்கிய கதாபாத்திரமாக அமையும் என்பதில் மாற்றமில்லை.
மத்திய ரிசர்வ் வங்கியின் நடப்பு ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) 5.15 சதவீதமாக உள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதமாகவும், வங்கி விகிதம் 5.40 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 3.25 – 3.50 % என்ற அளவில் உள்ளது. இது முன்னர் 4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு வருடத்திற்கான டெபாசிட் விகிதம் 6.10 – 6.40 சதவீதம் என்ற அளவில் பாரத ரிசர்வ் வங்கியால் சொல்லப்பட்டுள்ளது. கடனுக்கான அடிப்படை வட்டி விகிதம் 8.45 – 9.40 சதவீத அளவில் காணப்படுகிறது. மேலே சொன்னவை மத்திய ரிசர்வ் வங்கியால் கடந்த நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தகவல். ஆனால் வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தும்.
ரெப்போ வட்டி விகிதம் என்பது மத்திய ரிசர்வ் வங்கி(RBI), நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து மத்திய ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo Rate).
நாட்டின் பொருளாதாரத்தை பொறுத்தவரை வங்கி வட்டி விகிதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என சொல்லியிருந்தோம். உதாரணமாக பொருளாதார மந்த நிலையில், ஒரு நிறுவனத்திற்கு கடன் அதிகமாக இருக்கும் போது அதன் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனை களைய அரசு மற்றும் மத்திய வங்கியின் சார்பில் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும். வங்கியின் வட்டி விகிதம் குறைவாக இருந்தால், நிறுவனங்களும் குறைவாக வட்டியை கட்டி விட்டு, உற்பத்தியை மேம்படுத்தலாம். இதன் மூலம் விற்பனை மற்றும் தொழிலாளர்களின் வருவாயில் மாற்றம் ஏற்படலாம். இது அரசுக்கான வரி வருவாயை பெறக்கூடும்.
மாறாக, பணவீக்கம் அதிகரித்து அதன் மூலம் வங்கி வட்டி விகிதங்கள் கூட்டப்பட்டால், நிறுவனத்தின் நிதி அறிக்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். தனிநபர் வருவாய் மற்றும் கடன் நிலையிலும் பாதகமாக அமையும். எனவே மத்திய ரிசர்வ் வங்கி கவனமாக பணவீக்கம் மற்றும் வட்டி விகித நிலையை கையாளும். அரசை பொறுத்தவரை மக்களிடையே பணப்புழக்கத்தை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை ஊக்குவிப்பதே முதல் கடமையாகும். இதன் காரணமாக அரசின் வரி வருவாய் அதிகரிக்கும். வரி வருவாய் நாட்டின் மானிய தேவைக்கு உதவக்கூடும்.
பொதுவாக பணவீக்கம் அதிகரிக்கும் போது, வட்டி விகிதங்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இது வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். அதே வேளையில் கடன் பெறுபவர்களுக்கு பாதகமாக செல்லும். நாட்டின் வட்டி விகிதம்(Interest Rate) கடந்த 20 வருடங்களில் சராசரியாக 7 சதவீத அளவில் காணப்படுகிறது. அதிகபட்சமாக 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 14.50 சதவீதமும், குறைந்த அளவாக கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 4.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை