1,76,000 கோடி ரூபாய் பரிமாற்றம் – அரசு எவ்வாறு செலவிட போகிறது ?
How the Central Govt can use the Rs. 1.76 Lakh Cr at best – RBI to Govt. of India
பிமல் ஜலான்(Bimal Jalan) கமிட்டி பரிந்துரையின் பேரில் மத்திய ரிசர்வ் வங்கி 1,76,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு பரிமாற்றம் செய்யப்பட உள்ளதாக செய்தி வெளியானது. உலக பொருளாதார மந்த நிலை உள்ள இந்த சூழ்நிலையில் ரூ. 1.76 லட்சம் கோடி தொகை நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க உதவும் என சொல்லப்படுகிறது. மறுபுறம் மத்திய ரிசர்வ் வங்கியின் உபரி தொகையை ஏன் மத்திய அரசுக்கு தற்போது பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சொல்லப்பட்ட நிலைப்பாட்டை நாம் எப்படி அணுகினாலும் சரி, தற்போது பொருளாதார மந்த நிலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக பொருளாதாரமும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த வீழ்ச்சி தற்காலிகமானது தான் எனினும், ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார சரிவை சமாளிக்க பல கொள்கைகளும், மாற்றங்களும் எடுக்கப்பட்டு வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு, 1,76,000 கோடி ரூபாய் என்ற மதிப்பு 2ஜி ஸ்பெக்ட்ரம்(Spectrum) சர்ச்சையாக பேசப்பட்டது. இப்போது பாரத ரிசர்வ் வங்கியின் பரிமாற்றமாக களம் இறங்கியுள்ளது. மத்திய அரசின் நிதி பற்றாக்குறை அதிகரித்து வருவதும், வங்கிகளின் வாராக்கடன் பிரச்னையால் நிதிநிலை மோசமடைந்து வருவதும் நாட்டின் பொருளாதத்திற்கு சாதகமாக இல்லை.
மேலும் மத்திய அரசின் திட்டங்களுக்கும் போதுமான நிதி ஆதாரம் இல்லை என சொல்லப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது ரூ. 1.76 லட்சம் கோடி பரிமாற்ற முடிவு என சொல்லப்படுகிறது. பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India), மத்திய அரசுக்கு பரிமாற்றம் செய்யும் அதிகபட்ச தொகையாக இது கருதப்படுகிறது. பிமல் ஜலான் கமிட்டி பாரத ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்டது தான் எனவும் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரத ரிசர்வ் வங்கி, பொருளாதார மூலதன கட்டமைப்பு குழு(Economy Capital Framework) ஒன்றை ஏற்படுத்தியது. இதன் தலைவராக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. பிமல் ஜலான் பொறுப்பு வகித்தார். இந்த குழு மத்திய ரிசர்வ் வங்கியில் உள்ள உபரித்தொகையை அரசுக்கு பரிமாற்றம் செய்வதற்கான மதிப்பீட்டை வழங்கும்.
பரிமாற்ற தொகையான ரூ. 1.76 லட்சம் கோடி இந்திய பொருளாதார மதிப்பில்(GDP) 0.5 சதவீதம் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் ரூ. 1.23 லட்சம் கோடி ரூபாய் கடந்த 2018-19ம் நிதியாண்டில் பாரத ரிசர்வ் வங்கி ஈட்டிய லாபமாகும். பொதுவாக பாரத ரிசர்வ் வங்கியிலிருந்து(RBI) மத்திய அரசுக்கு பண பரிமாற்றம் செய்யப்படும். இம்முறை பரிமாற்றம் செய்யப்பட்ட அதிகபட்ச தொகைக்கான காரணம், பாரத ரிசர்வ் வங்கியின் லாபம் அதிகரித்தது தான் என கூறப்படுகிறது.
பெறப்படும் தொகை எவ்வாறு கையாளப்படலாம் என்பதை பற்றி நிதி அமைச்சர் இன்னும் சொல்லவில்லை. இந்த தொகையை கொண்டு மத்திய அரசு தனது நிதி பற்றாக்குறையை(Fiscal Deficit) குறைத்து கொள்ளும், வங்கிகளின் நிதி நிலையை (Bank Liquitiy crisis) சரி செய்ய பயன்படுத்தும் என பொருளாதர வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தற்போது காணப்படும் பொருளாதார மந்த நிலையை களைய இந்த தொகை உதவக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதன் தாக்கம் அடுத்து வரும் காலாண்டு முடிவுகளிலும், அரசின் திட்ட செயல்பாடுகளிலும் தெரிய வரும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை