பொது பட்ஜெட் 2019 – அறிக்கை துளிகள்
Union Budget 2019 – Highlights
ஐந்து ட்ரில்லியன் டாலர்($5 Trillion Economy) பொருளாதார இலக்கு, கிராமப்புற வாழ்வை மேம்படுத்துதல், சாலை மற்றும் உட்கட்டமைப்பு சேவையை அதிகரித்தல் என பல இலக்குகள் நடப்பு மத்திய அரசினால் கூறப்பட்டுள்ளது. இதனை சார்ந்து நேற்று பட்ஜெட் தாக்கலும் முடிந்து விட்டது.
நேற்றைய பொது பட்ஜெட் 2019 – தாக்கலை நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் வழங்கினார். நடப்பு 2019ம் வருடத்தின் இரண்டாவது மற்றும் இறுதி பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டில் பல அம்சங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நிறை, குறைகள் சமமாக உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
2013-14ம் நிதியாண்டில் 11வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, தற்போது உலகின் 6வது பெரிய பொருளாதார நாடாக உருவாகியுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை(Current Account Deficit) கடந்த வருடம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) 2.1 சதவீதமாக உள்ளது. இது 2013-14ம் நிதியாண்டில் 5.6 சதவீதமாக இருந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீடு(FDI) சுமார் 64.4 பில்லியன் டாலர்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பில் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) 3.3 சதவீதமாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2013-14ம் நிதியாண்டில் 4.5 சதவீதமாக இருந்தது.
சாலை மற்றும் கடல்வழி போக்குவரத்தை மேம்படுத்த அதற்கான திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. வான் வழி போக்குவரத்தில் சேவையை சிறப்பாக செய்யவும், ரயில் சேவையை மேம்படுத்தவும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ரயில்வே உட்கட்டமைப்புக்காக ரூ. 50 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. இது 2018ம் ஆண்டு முதல் 2030 வரையிலான காலத்திற்கு எனவும், ரயில்வே துறையில் அரசு-தனியார் கூட்டு(PPP) ஒப்பந்தம் மூலம் திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாகவும், இதற்காக நடப்பு நிதியாண்டில் தற்போது ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்முனைவை ஊக்குவிக்க தூர்தர்சன் மூலம் புதிய சேனல்(New Startup TV Channel) தொடங்கப்படும்.
2019-20ம் நிதியாண்டிற்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல்(Disinvestment) தொகை ரூ. 1.05 லட்சம் கோடியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி மூலம் அரசுக்கு 21 பைசா வருமானமாக கிடைத்துள்ளது. அதே வேளை செலவினங்களில் வரிகள் மூலம் 23 பைசாவை மத்திய, மாநில அரசுகள் பங்கிட்டுள்ளன.
ஐந்து சதவீதம் பென்ஷன் திட்டத்திற்கும், 8 சதவீதம் மானியத்திற்கும் மற்றும் 9 சதவீத தொகை பாதுகாப்பு துறைக்கும் செலவிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் நேரடி வரி மூலம்(Direct Tax) அரசுக்கு 11.4 லட்சம் கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.
திறந்த மலம் கழித்தல் இல்லா (Open defecation free) திட்டத்தின் மூலம் 5.6 லட்சம் கிராமங்கள் பயன்பெற்றுள்ளன. இதுவரை 95 சதவீத நகரங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளன. நாடு முழுவதும் உள்ள 45,000க்கும் மேற்பட்ட பொது கழிப்பிடங்களின் இடஅமைவு கூகுள் மேப்பில்(Google map) பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற வாழ்வை மேம்படுத்த அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குதலை உறுதி செய்வது, சாலைகளை இணைப்பது மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு தொகையை உறுதி செய்வதென பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
முத்ரா(Mudra Loan Scheme) திட்டத்தின் மூலம் பயன் அடைந்தவர்களில் 70 சதவீதம் பெண்களே. 7 கோடிக்கும் அதிகமான சமையல் எரிவாயு இணைப்புகள் இதுவரை நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. சிறு கடைகள் மற்றும் சில்லறை வியாபாரிகளின் ஓய்வு காலத்தை பாதுகாக்க குறைந்தபட்ச பென்ஷன் திட்டம், இளைஞர்களின் கல்வித்திறனை மேம்படுத்த திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளது.
நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும், டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறவும், மாசில்லா நகரங்களை உருவாக்க மின்சார வாகனங்களை ஊக்குவித்தல் என பல விஷயங்கள் நேற்றைய பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. பட்ஜெட் 2019க்கான நிறை மற்றும் குறைகளை அடுத்து வரும் பதிவில் காண்போம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை