பிரமிப்பான வளர்ச்சி… பிரச்சினையில் யெஸ் வங்கி – வரலாறு
Astonishing Growth and Facing problems – Yes Bank Story
நாட்டில் உள்ள வங்கிகளின் சேவை நம் அனைவருக்கும் தேவையென்றாலும், வங்கிகளின் வாராக்கடன் பொருளாதார மந்த நிலையையும், மீண்டும் அந்த சிக்கல் மக்களிடமே செல்கிறது. ஒரு புறம் நேர்மையான முறையில் தனது கடனை அடைப்பவர்களும், மற்றொரு திசையில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் திவாலாகும் நிலையும் நம் நாட்டில் தற்போது அடிக்கடி ஏற்படுகிறது.
தனி நபர் முதல் தனியார் நிறுவனங்கள் வரை இன்று வங்கிக்கடன் என்பது அவசியமான ஒன்றாகி விட்டது எனலாம். வங்கிகள் தனி நபர் சார்ந்த கடன் அளிக்கும் சேவைகளில் கறாராக இருப்பினும், நிறுவனங்கள் கடன் பெறுவதில் அவ்வாறு இருக்க முடிவதில்லை. இதன் விளைவாக வங்கிகளின் வாராக்கடன் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கின்றன. இதனை சரிசெய்யும் முயற்சியில் மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பல்வேறு கொள்கைகளை வடிவமைத்து வருகிறது.
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லையென்றாலும், தனியார் வங்கிகள் சில தொடர்ச்சியான வருமான இலக்கை அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனியார் வங்கியான யெஸ் வங்கியின் (Yes Bank) தொடர் வளர்ச்சி முக்கியமானது. அதுவும் வங்கி சேவையின் அனுபவம் மிக குறைந்த காலத்தில் என்பது தான் பிரமிக்கத்தக்கது.
டில்லியில் பிறந்தவர் திரு. ராணா கபூர் (Rana Kapoor). பள்ளி மற்றும் இளங்கலை பட்டப்படிப்பை தனது சொந்த ஊரிலே முடித்திருந்தாலும், மேற்படிப்பை அமெரிக்காவில் கற்ற இவர் பேங்க் ஆப் அமெரிக்கா (Bank of America) வங்கியில் மேலாண்மை பயிற்சியில் தொடங்கி தலைமை பதவி வரை சுமார் 16 வருடங்கள் பணிபுரிந்தார். பின்பு க்ரின்ட் லேஸ் வங்கியில் (ANZ Grindlays) பொது மேலாளர் பதவியில் இருந்த ராணா 1997 ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் வங்கி அல்லாத நிதி சேவையில் (NBFC) தனது தொழிலை ஆரம்பித்தார்.
2003 ம் வருடத்தில் ராணா கபூர் மற்றும் அசோக் கபூரால் (Ashok Kapur) தொடங்கப்பட்டது யெஸ் வங்கி – YES Bank. ராணா கபூரின் மனைவி பிந்து, பிந்துவின் தங்கை கணவர் தான் அசோக் கபூர். 5 கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட யெஸ் வங்கி அப்போது பெரும்பாலானவருக்கு ஒரு சிறிய நிதிச்சேவை நிறுவனமாக தான் தெரிந்தது. 2004 ம் ஆண்டில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை அதிகாரியாக ராணா கபூர் நியமிக்கப்பட்டார். 2005 ம் ஆண்டில் யெஸ் வங்கி பொது பட்டியிலடப்பட்ட நிறுவனமாக (Public Listed – IPO) மாற்றம் பெற்று அதன் ஆரம்ப விலையாக, பங்கு ஒன்றுக்கு ரூ. 45 ஆக சந்தைக்கு (Share Price) வந்தது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
2008 ம் வருடத்தில் ஏற்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதலில், தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த அசோக் கபூர் கொல்லப்பட்டார். இதன் பின்னர் அசோக் கபூரின் மனைவி மது கபூர் (Madhu Kapur) நிர்வாகத்தில் வந்தாலும், ராணா கபூரின் நிதிச்சேவை செயல்பாடு யெஸ் வங்கியை மிகப்பெரிய வளர்ச்சிக்கு கொண்டு சென்றது. வங்கியின் சேவை குறைந்த கிளைகளை கொண்டிருந்தாலும் அதன் வருமான வளர்ச்சி துரிதமாக வளர்ந்தது. ஆண்டிற்கு 30 சதவீத தொடர் வளர்ச்சியில் அதன் லாபமும் அடைந்தது. 2007-2008 ம் நிதியாண்டில் 200 கோடி ரூபாயாக இருந்த யெஸ் வங்கியின் நிகர லாபம் 2017-18 ம் வருடத்தில் 4,225 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டது. இதன் மூலம் முதலீட்டாளர்களும் பெருத்த லாபமடைந்தனர்.
வளர்ச்சி ஒரு புறம் இருக்க, 2014 ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நிர்வாக கட்டமைப்பில் ராணா கபூருக்கும், அசோக் கபூரின் மனைவி மது கபூருக்கும் இடையே சர்ச்சை (Dispute) ஆரம்பமானது. இதன் தாக்கம் 2017 ம் ஆண்டின் நிதி அறிக்கையில் இடைவெளியை (Divergence) காண்பித்தது. நிர்வாகத்தில் ஏற்பட்ட சிக்கலால் யெஸ் வங்கி தனது பங்குதாரர்களின் பல்வேறு கேள்விகளுக்கு உள்ளானது. IPO முறைகேடு, ராணா – மது கபூர் வாதம், Yes Capital நிறுவனத்தின் ராணாவின் பங்கு, இயக்குனர் குழுவில் அடுத்தடுத்த ராஜினாமா என யெஸ் வங்கியின் செய்தி பரவலானது.
ராணா கபூரின் பதவி காலம் முடியும் நிலையில், பாரத ரிசர்வ் வங்கி இவருடைய பதவி காலத்தை வரும் ஜனவரி 31, 2019 வரை நீட்டித்துள்ளது. ராணா தனது பதவியில் இருந்து வெளியேறும் காலத்தில், அந்த பதவிக்கு வருபவர் யெஸ் வங்கியின் வளர்ச்சியை மேற்கொண்டு செல்வது தான் எதிர்பார்ப்பாக உள்ளது. ராணா கபூர் மீண்டும் தனது பதவிக்கு வருவதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இல்லையென்றால், இயக்குனர் குழுவில் அவருக்கான இடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிகிறது.
ராணா – மது கபூர் இரு குடும்பத்திற்கிடையே நடைபெறும் இந்த வாதம் முற்றுப்பெற்றால் மட்டுமே, யெஸ் வங்கியின் நிர்வாகத்தில் நலன் காணலாம். யெஸ் வங்கியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டாலும் தனது பங்குகளை விற்க மாட்டேன் என ராணா கபூர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘ இங்கே வைரங்கள் எப்போதும் உள்ளன (Diamonds are Forever). என்னுடைய ஒரு பங்கினை கூட நான் விற்க போவதில்லை ‘ என்கிறார்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை