நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 4
Budget Planning for Middle Class Family – Part 4
இது நமது நடுத்தர பட்ஜெட் திட்டமிடலின் நான்காம் பகுதி…
மதுரை திருமங்கலத்தில் வசித்து வருபவர் திரு. பன்னீர் செல்வம், சொந்த தொழில் செய்துவரும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மனைவி திருமதி. பாண்டியம்மாள் அருகில் உள்ள கிராமத்தில் விவசாயத்தை பார்த்து வருகிறார். மூன்று மகள்களையும் மேற்படிப்பு வரை படிக்க வைத்து, அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருவதையே லட்சியமாக கொண்டுள்ள பன்னீர் செல்வம் அதற்கான நிதி சார்ந்த நடவடிக்கைகளை எப்போதும் கவனத்துடன் கையாண்டு வருகிறார்.
இனி இவருடைய பட்ஜெட் திட்டமிடலை பார்ப்போம்…
தனது தொழில் மூலம் மாத வருவாயாக ரூ. 30,000 ஐ பெறும் பன்னீர் செல்வம், தனது மகள்களின் கல்விச்செலவுக்காக மாதம் 15000 ரூபாயை செலவிடுகிறார். முதல் மகள் பொறியியல் பட்டப்படிப்பில் நான்காம் ஆண்டிலும், இரண்டாவது மகள் பி.எஸ்.சி. கணிதம் முதல் ஆண்டிலும், மற்றும் கடைக்குட்டி தற்போது பனிரெண்டாம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். முதல் மகளின் பொறியியல் படிப்பிற்கு கல்விக்கடன் வாங்கியிருந்தாலும், கல்விச்செலவுகளில் அதற்கான மற்ற செலவுகளுக்கு தேவையான பணத்தை ஒதுக்கி வைத்துள்ளார்.
தனது குடும்பத்தில் உள்ள ஐந்து நபர்களுக்கு சேர்த்து மருத்துவம் மற்றும் காப்பீட்டு செலவுகளுக்காக மாதம் ரூ. 3500 ஐ செலவழித்து வருகிறார். இது போக தனது மகள்களின் வரப்போகும் திருமணச்செலவுகளுக்கு என 8000 ரூபாயை மாதாமாதம் சேமித்து வருகிறார். அதனை கொண்டு மூன்று மகள்களின் திருமண நிதி இலக்குகளை அணுகி வந்துள்ளார். திருமதி. பாண்டியம்மாள் அவர்களின் விவசாய வருமானமாக ரூ. 10,000 குடும்ப நிதிச்சுமையை சற்று குறைகிறது. மொத்தத்தில் மாத வருவாயாக ரூ. 40,000 /- யையும், அவற்றில் மாதச்செலவுகளாக ரூ. 37,000 செலவிடப்படுகிறது.
நாம் ஏற்கனவே பார்த்தது போல, சேமிப்பு மற்றும் முதலீடுகளும் ஒரு வகையான செலவே. பன்னீர் செல்வம் குடும்பத்தின் வரவு-செலவு போக, உபரித்தொகையாக ரூ. 3000 இருப்பதும் நிதி சார்ந்த விஷயத்தில் ஆரோக்கியமான விஷயமே.
நினைவில் கொள்க:
- பன்னீர் செல்வத்தின் முதல் மகள் இறுதி ஆண்டு கல்வியை முடித்து விட்டு, வேலைக்கு செல்லும் முனைப்பில் உள்ளார். இதன் மூலம் தனது குடும்பத்தின் நிதி ஆதாரத்தை அதிகப்படுத்தலாம். அதே நேரத்தில், இரண்டாவது மகள் பட்ட மேற்படிப்பையும் (Post Graduation) படிக்க விரும்புகிறார். மூன்றாவது மகளின் வரப்போகும் பட்டப்படிப்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- முதல் மகளின் புதிய வேலைவாய்ப்பால், நாம் மேலே சொன்ன எதிர்கால கல்விச்செலவுகளை கையாளலாம் அல்லது மூத்த மகளின் பொறியியல் படிப்பு முடிந்து விடும் நிலையில் இருப்பதால், அந்த தொகையை இனி மற்ற மகள்களின் கல்விச்செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
- பன்னீர் செல்வம் மற்றும் அவரது துணைவி, இருவருக்குமான ஓய்வு கால நிதியை (Retirement Planning) அவர்கள் இதுவரை ஏற்படுத்தாதது ஒரு குறையாக உள்ளது. அவர்கள் மகள்களின் எதிர்கால வேலைவாய்ப்பை சார்ந்தே உள்ளனர். மகள்கள் உதவும் பட்சத்தில், மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இவர்களின் ஓய்வு காலத்திற்கு முதலீடு செய்யலாம்.
- தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் வருமானம் பெரும்பாலும் ஏற்ற-இறக்கமாக இருக்கும். அதனால் நாம் வருமானம் பெறும் வேளையிலே சேமிக்கும் தன்மையை கொண்டிருக்க வேண்டும்.
- பொதுவாக, நாம் நமது குழந்தைகளின் நிதியை சார்ந்து இருப்பது ஆரோக்கியமானதல்ல(ஏன்?). அவர்களது திருமண வாழ்க்கைக்கு பிறகு, நமக்கான நிதி வாழ்க்கையை நாம் பூர்த்தி செய்ய முடியாது. அதனால் நாம் குழந்தைகளின் படிப்பு செலவை நிர்வகிக்கும் போதே, நமக்கான ஓய்வு காலத்திற்கு சிறுக சிறுக சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வது நலம்.
போதுமான சேமிப்பும், தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பதும் ஒரு குடும்பத்தின் நிதி நலனை பாதுகாக்கும்; குடும்பத்தில் அனைவருக்கும் அமைதியை பேணும்.
பட்ஜெட் திட்டமிடல் சம்மந்தமான உங்கள் கேள்விகள் மற்றும் கருத்துக்களை இங்கே பகிரலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை