நிதி பற்றாக்குறை ஒதுக்கப்பட்ட அளவை விட குறைவாக இருக்கும் – நிதி அமைச்சர்
Fiscal Defit would be below budgeted level of 3.3 percent
2018-19 ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை (Fiscal Deficit) 3.3 சதவீத அளவுக்குள் இருக்கும் என நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டு முழுவதும், ஒதுக்கப்பட்ட 3.3 சதவீத அளவை விட நிதி பற்றாக்குறை குறைவாக இருக்கக்கூடும் என அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாதங்களிலேயே ஒதுக்கப்பட்ட அளவில் 55 சதவீத அளவை எட்டியது. இந்த நிதி வருடத்தின் ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறை விகிதம் நாட்டின் ஜி.டி.பி. (GDP) ல் 3.3 சதவீதம் என்ற போதிலும், 2017-18 இந்த அளவு 3.53 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-மே மாத காலத்தில், நிதி பற்றாக்குறை அளவு ரூ. 3.45 லட்சம் கோடியாகும். இந்த அளவு, இந்த வருடத்தின்ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறை அளவில் 55 சதவீதத்தை எட்டியது. நிதி பற்றாக்குறை என்பது பொதுவாக அரசின் வரவுக்கும், செலவுக்கும் இடையேயான அளவாகும்.
இந்த நிதியாண்டில் சரக்குகள் மற்றும் சேவை வரிகளின் (GST) வருவாய் ரூ. 13 லட்சம் கோடிக்கு மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017-18 ம் ஆண்டில் ஏப்ரல்-மே மாதத்தில் நிதி பற்றாக்குறை ஒதுக்கப்பட்ட அளவில் 68 சதவீதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
தொழில் துறை தொழிலாளர்களின் பணவீக்கம் (Retail Inflation for Industrial Workers) கடந்த மே மாதத்தில் 3.96 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் ஏப்ரல் மாதத்தில் 3.97 % ஆக இருந்தது. உணவு பொருட்களுக்கான சில்லரை பணவீக்கம் 1.66 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மீன், கோழி, முட்டை, வெங்காயம், உருளை கிழங்கு, பால் மற்றும் நெய் போன்ற உணவு பொருட்கள் விலை உயர்ந்தும், கோதுமை, மாம்பழம், வெண்டை, மற்றும் கடுகு எண்ணெய் போன்றவை விலை குறைந்தும் காணப்பட்டது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை