அரவணையுங்கள், ஆனால் தனியாக முடிவெடுங்கள்
INVESTMENT DECISION (S) KILLS
நாம் பள்ளிப்பருவத்திலே பத்தாம் வகுப்பு (அ) பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது, அடுத்து என்ன படிக்கலாம் என்பதை ஒரு Ph.D ஆராய்ச்சி போலவே எடுத்து கொள்வோம். யாரிடமெல்லாம் அதனை பற்றி கேட்கலாம், என்னென்ன படிப்புகள், அதற்கான விளம்பரங்கள் மற்றும் செய்திகள், நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்வது என நிறைய விஷயங்களை நமக்கான படிப்பினை தேர்ந்தெடுப்பதற்காக செய்திருப்போம். ஆனால் முடிவில் ஏதேனும் ஒரு படிப்பை (Specialisation) தேர்ந்தெடுத்து விட்டு, இடையில் எந்த சந்தேகமும் இல்லாமல் மேற்படிப்பையும் முழுதும் முடித்திருப்போம். வேலை (அ) தொழில் என வரும் போது, நான் ஏன் இந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன் என பல சமயங்களில் நமக்கு நாமே குறைப்பட்டு கொள்வதுண்டு.
ஏன் இந்த முடிவு ?
நாம் நமது மேற்படிப்பை பற்றி பல பேரிடம் விளக்கம் கேட்டிருப்போம். நம் மூளையில் அதற்கான தகவல்கள் பல சேகரிக்கப்பட்டுவிட்டன, கூடவே குழப்பமும். தேர்ந்தெடுப்பின் தொடக்கத்தில் யாரோ ஒருவர் சொன்ன அந்த கடைசி விளக்கம், நமக்கான படிப்பை தேர்ந்தெடுக்க வைத்திருக்கும். உண்மையில் நாம் அதனை தேர்ந்தெடுக்கவில்லை. அப்புறம் ஏன் நமக்கு நாமே குறைப்பட்டு கொள்ள வேண்டும். இது தான் முடிவெடுத்தலின் விளைவு (Effect of Decision making). நாம் Ph.D அளவுக்கு ஆராய்ச்சி செய்து விட்டு, முடிவில் செய்த தகவல் (Project) நமக்கானது இல்லையென்றால் ! முடிவின் விளைவு அப்படிதான் அமைகிறது. நமது தேவை மற்றும் இலக்கு சார்ந்து தேர்ந்தெடுத்திருந்தால், நாம் படித்த படிப்பு நமக்கு வேலையை தாமதப்படுத்தினாலும், நமக்கு கிடைத்த அறிவு நம் விருப்பப்படி செயல்பட ஆரம்பிக்கும். அதனால் தான் சிலர் பள்ளிப்படிப்பை முடிக்காவிட்டாலும், வாழ்க்கையிலும் தங்கள் தொழிலிலும் சிறந்து விளங்குகின்றனர்.
Decision Making (S)kills…
“ முடிவெடுத்தலும் ஒரு சிறந்த கலையே… நாமாக முடிவெடுத்திருந்தால் ! “
நம் பள்ளிப்பருவத்தில் நாம் செய்த தேர்ந்தெடுப்பதின் தவறே (விளைவு) நமது முதலீட்டிலும் தொடர்கிறது. நண்பர்கள், உறவினர்கள் சொன்னார்கள் என்று ஏதேனும் ஒரு முதலீட்டு சாதனத்தை(Investment Product), நமக்கு தேவையில்லை என்றாலும் எடுப்பது. என் பெற்றோர் செய்தனர் என முதலீட்டை ஆராயாமல் பின்பற்றுவது, பொருளின்(Brand) மேல் உள்ள அன்பில் [ஆசையில்] 🙂 முடிவெடுப்பது. தரகரின் குறிப்பை (Tip) அப்படியே நமது முடிவாக எடுத்து கொண்டு, முதலீடு செய்வது என நமது முடிவெடுத்தலின் அளவு மாறுகிறது. முடிவில், நமக்கான பலனை நாம் அனுபவிக்காமல் போவதுண்டு.
நாம் ஏற்கனவே சொன்னது போல, முடிவெடுத்தலும் ஒரு கலையே ! ஆனால் அதனை நீங்களாக செய்ய வேண்டும். நம் எல்லோருக்கும் ஒரு அனுபவம் உண்டு. நெருக்கடியான (Traffic – Peak Hours) சாலை பயணத்தில், நாம் நமது இரு சக்கர வாகனத்தில் நமக்கு முன் செல்லும் மற்றொரு வாகனத்தை, மிக நெருக்கமாக பின் தொடர்ந்து செல்வோம். திடீரென்று ஒரு பள்ளம் தென்படும். முன் சென்ற வாகனம் அதனை சிரமமின்றி கடக்கும். நாம் பள்ளத்தில் தட்டுத்தடுமாறி செல்வோம். “ ஏன் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்றோம், சாலையை பார்த்து சென்றிருக்கலாமோ “ என நினைவில் கேட்டிருப்போம். இது தான் நாம் செய்யும் முடிவெடுத்தலின் விளைவு. நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தை, உங்களுக்காக முதலீடு செய்ய போகிறீர்கள். அந்த முதலீட்டின் பலன் உங்களுக்கோ (அ) உங்கள் குடும்பத்திற்காகவோ இருக்கலாம். அப்படியிருக்க முடிவினை நீங்கள் தான் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
முடிவெடுப்பதின் சரியான காரணிகள்:
- தெளிவான தேவை (Needs)
- திட்டமிடப்பட்ட இலக்கு (Goals)
- உறுதியான காலவரையறை (Time Period)
- முதலீட்டு முடிவின் பலனை அனுபவித்தல். (Returns / Benefits)
உதாரணத்திற்கு:
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தங்குவதற்கு ஒரு நிரந்தர இடம் தேவை (Needs), அதனால் ஒரு புதிய வீட்டை வாங்க (Goals) முடிவெடுக்கிறீர்கள், அதற்காக சில வருடங்கள் பணத்தை சேமிக்க முயல்கிறீர்கள் (அ) வீட்டுக்கடனை பெறுகிறீர்கள் (Time Period). முடிவில் வீடு உங்களுக்கு சொந்தமாகிறது (Benefits). இப்போது உங்களுக்கு மகிழ்ச்சி தானே !
நீங்கள் யாரிடமும் முதலீட்டு ஆலோசனைகளை கேளுங்கள்; ஆனால் அதற்காக உங்கள் நேரம் முழுவதையும் வீணடிக்க வேண்டாம். எனவே, சரியான ஆலோசகரை தேர்ந்தெடுப்பதும் அவசியம். மேலே சொன்ன முடிவெடுப்பதின் காரணிகளை, ஆலோசனையுடன் பொருத்தி பாருங்கள். ஆலோசனைகளின் கடந்த கால விளைவுகளையும், இனி அதற்கான எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதனையும் கவனியுங்கள். முடிவில், நீங்களாகவே முடிவெடுங்கள்.
“……… are subject to market risks. Please read the offer document carefully before investing.”
“ Insurance is not an investment, it just protects your wealth “
Insurance ஐ insurance ஆக பாருங்கள்; Investment ஐ investment ஆக பயன்படுத்துங்கள். Risk ஐ உணருங்கள். ஆனால் அதற்காக முதலீட்டை ஒதுக்க வேண்டாம்.
சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு நகைச்சுவை கலந்த கருத்து (ஆங்கிலத்தில்):
A crow was sitting on a tree doing nothing. A rabbit saw the crow and asked “Can I also sit like you and do nothing all day long?” The crow answered:”Sure why not.” So, the rabbit sat on the ground below the crow and rested. All of a sudden a fox appeared, jumped on the rabbit and ate it.
Moral:
To be sitting and doing nothing, you must be sitting very high up.
முடிவுகள் ஜாக்கிரதை !
தகவல்களையும், மனிதர்களையும் அரவணையுங்கள்; முடிவுகள் உங்களிடம் 🙂
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !