செல்வத்தின் மதிப்பு செவித்திறனில்… Investing is Listening
“ செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை. “
குறளின் வடிவிலே நாம் புரிந்து கொள்ளலாம், ‘ செவிச்செல்வம் ‘ தான் ஒருவருக்கு தலையாய செல்வமென்று. ‘ LISTENING ‘ என்று சொல்லப்படும் செவிமடுத்தல் என்பது எந்த துறையிலும், எக்காலத்திற்கும் ஏற்றதொன்று. படம் பார்த்து கற்று கொள் என்பார்கள்; அதனை போல நமக்கு தேவையான விஷயங்களை நாம் கேட்டு புரிந்து கொண்டாலே நமக்கான வாய்ப்புகள் கிட்டும். பொதுவாக செல்வம் சேர்ப்பதிலும் அவ்வாறு தான்.
நீங்கள் செல்வந்தராக வெறும் பணத்தினை மட்டும் கொண்டால் போதாது; மாறாக, அதனை வளப்படுத்துவதற்கான, பாதுகாப்பான வழிமுறைகளை பிறரிடம் கற்று கொள்ளவும் வேண்டும். நாம் விமர்சனம் செய்வதை விட மற்றவர்களிடம், நேர்மறையான செல்வம் படைத்தவர்களிடம் செவிமடுக்கவும் வேண்டும். பெரும்பாலான வெற்றிகள் செவிமடுத்தலிலும், அதனை சார்ந்த உரையாடலிலுமே நிகழ்கிறது. இன்று நாம் வாழும் வாழ்க்கை 100 சதவிகிதம் நகலாக தான் உள்ளது. நாம் செய்யாததை, மற்றவர்கள் முயற்சித்து கொண்டிருக்கின்றனர். நமது வெற்றி, தோல்வியும் அப்படி தான். செல்வத்தை பெருக்க உதவும் மந்திரம், இந்த ‘ Listening ‘ என்ற ஆயுதம்.
நாம் நினைப்பது போல, ‘ பெரும் செல்வந்தர்கள் மற்றவர்கள் பேச்சை கேட்பதில்லை மற்றும் அவர்களாகவே தன்னிச்சையாக முடிவெடுக்கின்றனர் ‘ என்பது உண்மையல்ல… உண்மையில், அவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை மதித்து, அவற்றிலிருந்து தங்களுக்கு தேவையானதை, தங்களால் முடிந்ததை வாய்ப்பாக மாற்றுகிறார்கள். அந்த மாற்றம் தான் அவர்களை வித்தியாசப்படுத்துகிறது. Warren Buffet, Bill Gates போன்ற பெரும் பணக்காரர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் புத்தக வாசிப்புக்கென்று தனி இடம் வைத்துள்ளனர். அது தான் அவர்களை சிறந்த ஒரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இது செல்வத்திற்கு மட்டுமல்ல. பகுத்தறிவிலும், மற்ற சேவைகளிலும் தான். திரு. அப்துல் கலாம் (Dr. A.P.J. Adbul Kalam) ஐயா அவர்களின் உயர்ந்த இடத்திற்கு காரணம், இந்த இரு குணங்கள் தான்.
- மற்றவர்களிடம் செவிமடுப்பது (அ) கற்று கொள்வது (Listening and Learning)
- கற்ற விஷயத்தை சரியாக மற்றவர்களிடம் சேர்ப்பது (Sharing to others)
அதற்காக நாம் வெறுமெனே காது கொடுத்து கேட்பது என்பதும் சரியான வேலையாகாது; வெறுமெனே காது கொடுத்து கேட்பதற்கும், புரிந்து கொண்டு கற்பதற்கும் (Hearing vs Listening) வித்தியாசம் உள்ளது. அது போல தான், நமது முதலீட்டிற்கும். நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்யும் முன், உங்கள் ஆலோசகர் (அ) தரகரின் பேச்சை உள்ளபடியே கேட்டு கொண்டு முதலீடு செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக, நீங்கள் உங்களின் முதலீட்டு நோக்கத்தை தெரிவித்த பின், அதற்கு அவரின் சரியான அணுகுமுறையே நமக்கு தேவை. அதனை புரிந்து கொண்ட பின்னர் நாம் முதலீடு செய்தால் போதுமானது. செவிமடுத்தலிலும் நாம் நமக்கு தேவையான விஷயங்களை சரியாக தேர்ந்தெடுத்து கற்று கொண்டாலே, நமக்கான செல்வம் நம்மை வந்து சேரும்.
‘ Investing is like Listening ‘
‘ Listening is the secret to discover great stories ‘
இன்று பங்குச்சந்தையில் நம்மில் பெரும்பாலானோரின் பணம் ஊகத்திலும், சரியான வழிமுறை இல்லாமலும் நஷ்டமடைகிறது. தரகர் சொன்னார், நண்பரிடம் கேட்டேன் என்று பணத்தை போட்டு விட்டு பின்பு தங்கள் தின வாழ்க்கையை சுமையாக பார்க்கிறார்கள். உங்கள் நோக்கத்தை சரியாக திட்டமிட்டு, அதற்கு பரிசலிக்கும் அணுகுமுறையை கடைபிடிக்க பழகுங்கள். பங்குச்சந்தையில் மட்டுமல்ல, மற்ற முதலீட்டிலும் நாம் அப்படிதான் செயல்பட வேண்டும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கஷ்டப்பட்டு இழப்பது என்பது அவசியமில்லையே ! அதனால் நிறைய வெற்றி, தோல்விகள் பற்றிய புத்தகங்களையும் வாசியுங்கள்; அதனை சார்ந்த மனிதர்களையும் சந்தியுங்கள். உங்கள் உரையாடல் நலம் பெறும்.
“ செவிமடுத்தல் செல்வத்தை சேர்க்கும் “
வாழ்க வளமுடன்,
வர்த்தக மதுரை – www.varthagamadurai.com