Tag Archives: kalyani group

ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

Automotive Axles – Fundamental Analysis – Stocks

கடந்த 1981ம் ஆண்டில் இந்தியாவின் கல்யாணி குழுமமும், அமெரிக்காவின் மெரிட்டார் நிறுவனமும் சேர்ந்து துவக்கியது தான், ‘ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ்’ நிறுவனம். வாகனங்களுக்கு தேவையான ரியர் டிரைவ் ஆக்சில் அசெம்பிளி தயாரிப்பு பிரிவில் நாட்டின் மிகப்பெரிய சுயாதீன உற்பத்தியாளராக தற்போது இந்நிறுவனம் உள்ளது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு தேவையான நீடித்த ஆயுள் கொண்ட இயக்கி அச்சுகள்(Drive Axles), பாதுகாப்பு மற்றும் ஆஃப்-ஹைவே(Off-Highway) துறை பயன்பாடுகளுக்கான அச்சுகள், டிரம் மற்றும் டிஸ்க் பிரேக்குகளை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

நிறுவனம் சமீபத்தில் லைட் டியூட்டி டிரைவ் அச்சுகள்(LCV) தயாரிப்பிலும் களம் இறங்கியுள்ளது. ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் நிறுவனம் பிரேக் தயாரிப்பு பிரிவில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ், ஆசியா மோட்டார் ஒர்க்ஸ், டெய்ம்லர் இந்தியா, வால்வோ, எஸ்எம்எல் இசுசு, பெம்மல்(BEML), மேன் டிரக்ஸ், ஐஷர், பாரத் போர்ஜ், மஹிந்திரா மற்றும் எஸ்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களாகும்.

நிறுவனத்தின் தயாரிப்பு அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, சீனா, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நிறுவனத்தின் மொத்த வருவாயில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் சுமார் 60 சதவீதமாகும். ஒட்டுமொத்த வருவாயில் ரியர் டிரைவ் ஆக்சில் பிரிவு 59 சதவீத பங்களிப்பையும், பிரேக்குகள் 21 சதவீத வருவாயையும் மற்றும் இதர பிரிவுகள் 20 சதவீத பங்களிப்பையும் தருகிறது. 

நிறுவனம் உள்நாட்டில் நான்கு உற்பத்தி ஆலைகளை கொண்டு இயங்கி வருகிறது. கூடுதலாக மெரிட்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு, தரப்படுத்துதல், முன்மாதிரி, சரிபார்ப்பு, சோதனை மற்றும் சந்தைக்குப்பிறகான பொறியியல் சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு தேவையான அச்சுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது சார்ந்து பல வாடிக்கையாளர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடலை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

செயல்பாட்டுச் செலவுகளை மேம்படுத்துதல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. உற்பத்தித் திறன்களை மேம்படுத்த புதிய இயந்திரங்கள் மற்றும் ஆட்டோமேஷனில் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,229 கோடியாகவும், செலவினம் 1,983 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் இயக்க லாபம் 246 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.166 கோடியாக இருந்துள்ளது. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(Operating Profit Margin) கடந்த பத்து வருட காலத்தில் சராசரியாக 10 சதவீதம் என்ற அளவில் இருந்து வருகிறது.

செப்டம்பர் 2024 காலாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் கையிருப்பு 882 கோடி ரூபாயாகும். நிறுவனத்தின் கடன் 27 கோடி ரூபாயாகவும், கடன்-பங்கு தன்மை 0.03 என்ற அளவிலும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 66 மடங்குகளிலும், பங்கு விலைக்கும், நிறுவனத்தின் விற்பனைக்குமான இடைவெளி 1.30 மடங்கு என்ற அளவிலும் இருக்கிறது. நிறுவனத்தின் தற்போதைய பி.இ விகிதம் 18 மடங்கு. 

விற்பனை வளர்ச்சியை காணுகையில் கடந்த பத்து வருடங்களில் 13 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கூட்டு லாப வளர்ச்சியில் கடந்த 10 வருட காலத்தில் இது 29 சதவீதமாக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 71 சதவீதமாக(கல்யாணி குழுமம்: 35.52% மற்றும் மெரிட்டார்: 35.52%) உள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும், உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு 12.77 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) கடந்த நிதியாண்டுகளில் நன்றாகவே இருந்துள்ளது.  

 நிறுவனம் மென்மையான சந்தை(Soft Market) மற்றும் குறைந்த அளவு தொழில் பிரிவுகளில்(Industry Volumes) சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக நடுத்தர மற்றும் கனரக வாகனப் பிரிவில் அதன் செலவினம் அதிகரித்து வந்துள்ளது. இதன் காரணமாக அதன் ஒட்டுமொத்த லாப விகிதமும் குறைவாக காணப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அச்சு தயாரிப்பு பிரிவில் தனது தலைமைத்துவத்தைப் பேணுவதில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்நிறுவனம் சுமார் 200 கோடி ரூபாய் முதலீட்டை ஏற்படுத்தி உற்பத்தி செயல்திறனை அதிகரிக்க முனைகிறது. 

ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் குறைந்தபட்ச அளவாக ரூ.1,720 மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,263 என வர்த்தகமாகியுள்ளது. 2024ம் நிதியாண்டில் இந்நிறுவனம் பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 32 ரூபாயை ஈவுத்தொகையாக(Dividend) வழங்கியுள்ளது. அடிப்படைப் பகுப்பாய்வு மதிப்பீட்டின் படி(DCF Valuation), நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1,178 – ரூ.1,473 என்ற விலையை ஒரு பங்குக்கு பெறும்.  கொரோனா பெருந்தொற்று காலச் சரிவின் போது, இப்பங்கின் விலை ரூ.360க்கும் குறைவாக வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கல்யாணி குழுமம் – பங்குச்சந்தை அலசல்

கல்யாணி குழுமம் – பங்குச்சந்தை அலசல் 

Kalyani Group – Conglomerate – Fundamental Analysis

கல்யாணி குழுமம் கடந்த 1960ம் ஆண்டு துவங்கப்பட்டது. தொழிலதிபர் திரு. நீல்காந்த் ராவ் கல்யாணி அவர்களின் புதல்வன் பாபா கல்யாணி(Babasaheb Kalyani) இந்த குழுமத்தின் தலைவராக உள்ளார். இந்திய பன்னாட்டு நிறுவனமாக விளங்கும் கல்யாணி குழுமம் தனது தொழிலை பொறியியல், எஃகு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகர்ப்புற உள்கட்டமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு ரசாயனம் என பரவலாக்கியுள்ளது. வாகனத்துறை மற்றும் ராணுவத்திற்கு தேவையான கூறுகளை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான பாரத் போர்ஜ்(Bharat Forge), கல்யாணி குழுமத்தின் ஒரு அங்கம் தான்.

பில்லியன் டாலர்களில் வருவாயினை கொண்டிருக்கும் இந்த குழுமம் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்களையும், பல வளர்ந்த நாடுகளில் தனது கிளைகளையும் அமைத்துள்ளது. உலக தொழில் சந்தையில் தலைமை வகிக்கும் பல நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் கல்யாணி குழும நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய போர்ஜிங்(Forging) நிறுவனம், போர்ஜிங் துறையில் நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமாகவும், முன்னணி பொறியியல் எஃகு உற்பத்தியாளராகவும் இதன் குழும நிறுவனங்கள் உள்ளன. குழுமத்தின் முக்கிய நிறுவனங்களாக பாரத் போர்ஜ், கல்யாணி டெக்னோ போர்ஜ், கல்யாணி ஸ்டீல், கல்யாணி தெர்மல், கல்யாணி டெக்னாலஜிஸ், சி.டி.பி.(CDP) பாரத் போர்ஜ், கல்யாணி பிரேக்ஸ், கல்யாணி ஷார்ப் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பிரபல ஐ-லீக்(I-League) கால்பந்தாட்டத்தின் பாரத் எப்.சி.(Bharat FC) அணி, கல்யாணி குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்திய பங்குச்சந்தையில் கல்யாணி குழுமத்தின் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. பாரத் போர்ஜ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 25,000 கோடி ரூபாய். 50 வருடங்களுக்கு மேலான தொழில் அனுபவத்தை கொண்டிருக்கும் பாரத் போர்ஜ் வார்ப்புகள் மற்றும் போர்ஜிங்(Castings & Forging) பிரிவில் உள்ளது.

உயர்தர கார்பன் மற்றும் அலாய் ஸ்டீல் போர்ஜ், இயந்திர கூறுகளை உற்பத்தி செய்யும் பிரிவில் கல்யாணி டெக்னோபோர்ஜ் நிறுவனம் உள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்ட கல்யாணி ஸ்டீல்(Kalyani Steels) நிறுவனம் இரும்பு மற்றும் எஃகு தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் விற்பனை வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. கடனில்லா நிறுவனமாக காணப்படும் இந்த நிறுவனத்தில் பாரத் போர்ஜ் முதலீட்டு நிறுவனம் 39 சதவீத பங்குகளை வைத்துள்ளது. பொதுவாக ஸ்டீல் துறை உலகளாவிய காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும் துறையாக காணப்படுகிறது.

கல்யாணி ஸ்டீல் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக டாட்டா, மஹிந்திரா, வால்வோ, மாருதி சுசூகி, நிசான், பெல்(BHEL), போர்ஸ் மோட்டார்ஸ், போர்டு, ஹூண்டாய், மெரிட்டார், ஐஷர் போன்ற நிறுவனங்கள் உள்ளன.

இருப்பினும், துறை சார்ந்த போட்டிகளை தன்னகத்தே கொண்டு கல்யாணி ஸ்டீல் நிறுவனம் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் கையிருப்பு 996 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 605 கோடி ரூபாய் சந்தை மதிப்புடைய கல்யாணி இன்வெஸ்ட்மென்ட்(Kalyani Investment) நிறுவனம், குழும நிறுவனங்களுக்கு தேவையான முதலீட்டை அளிக்க தொழில் செய்து வருகிறது. கடனில்லா நிறுவனமாக உள்ள இந்த நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 20 சதவீதமாக உள்ளது. கல்யாணி  குழுமத்தில் உள்ள நிறுவனங்களை பின்னொரு பதிவில் ஆழமாக அலசலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com