தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு
Income Tax Returns(ITR) Filing due date extended to December 2021 (For FY2020-21)
2020-21ம் நிதியாண்டில்(Financial Year) சம்பாதித்த வருவாய்க்கு மதிப்பீட்டு(Assessment Year) ஆண்டு 2021-22ம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் நிலையில்(வரிச்சலுகைகள் போக), வரிப்பிடித்தம் இல்லையென்றாலும் வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். தவறும் பட்சத்தில், பின்னொரு நாளில் அபராத தொகை செலுத்த நேரிடும்.
பொதுவாக ஒரு நிதியாண்டில் ஈட்டிய சம்பள வருமானம், வாடகை வருமானம், அஞ்சலகம், வங்கிகள், பங்குகள் மற்றும் பத்திரங்களில் கிடைக்கப்பெற்ற வட்டி வருவாய்க்கு அடுத்த மதிப்பீட்டு ஆண்டில் வரி தாக்கல் செய்ய வேண்டும். வரிப்பிடித்தம் செய்த தொகையில் ரீஃபண்ட்(Refund) பெற, வருமான வரி தாக்கல் செய்வதும் கட்டாயம். வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஒவ்வொரு மதிப்பீட்டு ஆண்டின் ஜூலை மாதத்துடன் முடிவடையும்.
ஆனால் கடந்தாண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-21ம் மதிப்பீட்டு ஆண்டில் ஜூலை மாதம் என சொல்லப்பட்ட காலக்கெடு பின்னர் நீட்டிக்கப்பட்டது. இம்முறையும் அது போன்று ஜூலை மாதத்திலிருந்து நடப்பு மாதமான செப்டம்பர் 30 வரை சொல்லப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று(09-09-2021) மாலை மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடுவை நடப்பாண்டின் டிசம்பர் 31ம் தேதியாக குறிப்பிட்டுள்ளது. நடப்பு 2021-22 மதிப்பீட்டு ஆண்டில் இதுவரை 6.01 கோடி பேர் வரி தாக்கல்(e-verified ITR) செய்துள்ளனர்.
வருமான வரி தாக்கலுக்கான புதிய தளம்(e filing 2.0) கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், வரி தாக்கல் செய்பவர்கள் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை சந்திக்க நேரிட்டது. இந்த சிக்கல்கள் இன்று வரை சரிசெய்யப்படாத நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை