தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – 10, ஜனவரி, 2021
Income Tax Returns Filing for Individuals extended to 10, January 2021
2019-20ம் நிதியாண்டுக்கான வருமானத்திற்கு நடப்பு மதிப்பீட்டு (AY 2020-21) வருடத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட சிரமத்தால் வரி தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடு சில மாதங்களுக்கு முன்பு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதன் படி தனிநபர் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கான காலக்கெடு இன்றுடன் (31-12-2020) முடிவடையும் நிலையில், மீண்டும் ஒரு முறை இதனை நீட்டித்துள்ளது நிதி அமைச்சகம்.
தனிநபர் வருமான வரி தாக்கலில் ஆண்டு வருவாய் (ஒட்டுமொத்த வருவாய்) ஒரு நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்தை கடந்தால், ஒருவருக்கு வரிப்பிடித்தம் இல்லையென்றாலும், வருமான வரி தாக்கல் செய்வது அவசியம்.
நேற்று (30-12-2020) மத்திய நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் மதிப்பீட்டு ஆண்டு 2020-21க்கு வருமான வரி தாக்கல் செய்பவர்களில் தணிக்கை செய்யப்பட்ட கணக்குதாரர்களுக்கு(Accounts audited) முன்னர் இருந்த 31, ஜனவரி 2021 என்ற காலக்கெடு தற்போது 15, பிப்ரவரி 2021 என சொல்லப்பட்டுள்ளது.
இது போல சர்வேதச மற்றும் குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர்களுக்கு முன்னர் இருந்த 31,ஜனவரி 2021 என்ற கடைசி தேதி, இப்போது 2021ம் ஆண்டின் பிப்ரவரி 15ம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வரிதாரர்களுக்கு (தனிநபர் உட்பட) ஏற்கனவே சொல்லப்பட்ட டிசம்பர் 31, 2020 என்ற காலக்கெடு, தற்போது 2021 ஜனவரி மாதம் 10ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
விவாத்(Vivad Se Vishwas Scheme) திட்டத்திற்கு 31, ஜனவரி 2021 மற்றும் நேரடி வரி மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் செல்லும் அறிவிப்பிற்கு 31, மார்ச் 2021 எனவும் காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய பொருட்கள் மற்றும் சேவை வரி(CGST) 2017 சட்டம், பிரிவு 44ன் கீழ் ஆண்டு வருவாயை சமர்பிப்பதற்கான தேதி 28, பிப்ரவரி 2021 ஆக சொல்லப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை