வரலாறு காணாத வங்கி மோசடிகள் – உங்கள் பணமும் இருந்திருக்கலாம்
All Time High in Bank Frauds of worth Rs. 2.63 Lakh Crore – H1: 2019 – 20 – RBI
நம் நாட்டில் உள்ள நிதி துறையில் மக்களின் நம்பிக்கையாக விளங்குவது வங்கிகளும், அஞ்சலகங்களும் தான். நாம் வாங்கக்கூடிய மாத சம்பளமாக இருந்தாலும், சிறு சேமிப்பாக இருந்தாலும், இல்லையெனில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பண பரிவர்த்தனை செய்வதாக இருந்தாலும் நாம் மேலே சொன்ன இரண்டு பிரிவுகளை தான் தேர்ந்தெடுப்போம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அஞ்சலகத்தை விட வங்கியில் கூடுதல் சேவை வழங்கப்படுவதால், நாம் பெரும்பாலும் வங்கி சேவைகளை பயன்படுத்தி வருகிறோம். நகைக்கடன், மாத வருவாய், ஓய்வூதியம், பிக்சட் டெபாசிட்(Fixed Deposit), ஏ.டி.எம்.(ATM) சேவை, காசோலை பரிவர்த்தனை, இணைய வழி பரிவர்த்தனை என பல தேவைகளுக்கு நாம் வங்கிகளை நம்பியுள்ளோம்.
இன்று நாம் பண பரிவர்த்தனை சார்ந்த பல செயலிகளை கண்டிருந்தாலும், நம்மில் பலர் வங்கிகளில் கிடைக்கப்பெறும் செயலிகளை பயன்படுத்துகிறோம். ஏனென்றால் நமக்கு வங்கியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக. இருப்பினும், நம் நாட்டை பொறுத்தவரை இணைய வழி பரிமாற்றத்திற்கான பாதுகாப்பு முழுவதுமாக அமைக்கப்படவில்லை எனலாம். குறிப்பிடத்தக்க பாதுகாப்பை தாண்டி, ஏதேனும் மோசடிகள்(Bank Frauds) நடந்தாலும் அதற்கான உடனடி தீர்வுகள் மற்றும் குறைதீர்க்கும் மையங்கள் இங்கு பெரிதாக இல்லை.
நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், நாட்டில் உள்ள வங்கிகளில் ஏற்பட்டுள்ள மோசடிகளின் மதிப்பு ரூ. 2.63 லட்சம் கோடி என பாரத ரிசர்வ் வங்கியின்(RBI) அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் நடைபெற்ற மோசடிகளின் எண்ணிக்கை மட்டும் 4,412 மற்றும் அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 1.13 லட்சம் கோடி ஆகும்.
கடந்த நிதியாண்டில் 6,801 வங்கி மோசடிகள் நடைபெற்று இருந்தன. ஆனால் அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 71,540 கோடி மட்டுமே. தற்போது சொல்லப்பட்டுள்ள வங்கி மோசடிகளின் மதிப்பு வரலாறு காணாத புதிய உச்சத்தை கண்டுள்ளது.
2019-20ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் 398 வழக்குகள் 50 கோடி ரூபாய்க்கும் மேலான மோசடிகள் என பாரத ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாய்க்கு மேலான வழக்குகள் 21 எனவும், அவற்றின் மதிப்பு 44,951 கோடி ரூபாய் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த மோசடிக்கு காரணமாக சொல்லப்படுவது, ‘ மோசடி நடந்த தேதிக்கும், அதனை கண்டறிய தேவைப்பட்ட நாளுக்குமான இடைவெளியே. அதாவது கால தாமதமாக கண்டறியப்பட்டுள்ளது ‘. வங்கி மோசடிகள் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளில் தான் அதிகமாக காணப்பட்டுள்ளது. 85 – 90 சதவீத மோசடிகள் பொதுத்துறை வங்கிகளிலும், 10 சதவீத மோசடிகள் தனியார் வங்கிகளிலும் மற்றும் இதர வெளிநாட்டு வங்கிகளிலும் நடைபெற்றுள்ளது. இதர பிரிவுகளில் பேமெண்ட் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகளும் அடங்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை