வாகனத்துறை விற்பனை வீழ்ச்சி – பொருளாதார பின்னடைவா ?
Automobile Sales drop – Economic recession ?
சீன-அமெரிக்க வர்த்தக போர் மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கான எல்லை பதற்றம் ஆகியவை ஒருபுறம் எனில், சமீபத்திய வாகனத்துறையின் விற்பனை வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளது. இந்திய நாடு விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை கொண்டது என்ற நிலை மாறி, இன்று சேவைத்துறையில்(Service sector) மட்டுமே நாம் சிறந்து விளங்குகிறோம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில்(GDP) விவசாயம் 16 சதவீதத்தையும், உற்பத்தி துறை(Manufacturing) 30 சதவீதத்தையும் மற்றும் சேவைத்துறை 54 சதவீதம் என்ற அளவை கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் உற்பத்தி சார்ந்த துறை இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை எனலாம்.
நடப்பு ஜூன் மாதத்தில் 7 நிறுவனங்கள் தனது பயணிகள் வாகன(Passenger vehicle) உற்பத்தியை குறைத்து கொள்வதாக கூறியுள்ளன. இவற்றில் டாட்டா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் மாருதி நிறுவனங்கள் அடங்கும். கடந்த மாதத்தில் உள்ளூர் பயணிகள் வாகன விற்பனையும் 20 சதவீதம் வரை சரிந்துள்ளது கவனிக்கத்தக்கது. இதற்கு முன்னர் இது போன்ற விற்பனை வீழ்ச்சி கடந்த 2001ம் ஆண்டில் தான் ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் பண்டிகை நாட்களிலும் வாகன விற்பனை வளர்ச்சி சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதன் தாக்கம் வாகனத்துறை பங்குகளிலும் வெளிப்பட்டு வந்துள்ளது. நடப்பு வருடத்தில் ஜனவரி மாதம் முதல் வாகன விற்பனை தொடர் சரிவை சந்தித்து வருகிறது, இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மே மாதத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் வணிக வாகனங்கள் முறையே விற்பனை 7 சதவீதம் மற்றும் 10 சதவீத சரிவை கண்டுள்ளன. வாகன ஏற்றுமதியும் கடந்த சில மாதங்களாக வளர்ச்சியில் தேக்கத்தை கொண்டுள்ளது. ஏற்கனவே மாருதி நிறுவனம்(Maruti Suzuki) டீசல் வாகன உற்பத்தியை வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தது.
பொருளாதாரத்தில் வலுவடைந்த நாடுகளிடையே ஏற்பட்டு கொண்டிருக்கும் வர்த்தக போரும், கச்சா எண்ணெய் விலை மாற்றமும் தற்போது வாகனத்துறையை பாதித்து கொண்டிருந்தாலும், உள்நாட்டிலும் இந்த துறைக்கு சாதகமான விஷயங்கள் நடைபெறவில்லை.
அதிகரிக்கப்பட்ட வாகன காப்பீடு தொகை(Insurance Premium), சரக்கு மற்றும் சேவை வரி(GST) ஆகியவற்றால் வாகன துறை வளர்ச்சி உள்நாட்டிலும் சரிவடைந்ததாக கூறப்படுகிறது. நடப்பில் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 28 சதவீதமாக இருந்து வருகிறது. இதனை 18 சதவீதம் என்ற வரி விதிப்பில் கொண்டுவரும் போது வாகன துறை வரும் காலத்தில் வளர்ச்சியை காணலாம். நம்மை போன்ற வளர்ந்து வரும் நாட்டில், உட்கட்டமைப்பு(Infrastructure) மற்றும் போக்குவரத்து மிகவும் அவசியமான ஒன்றாகும். வாகனத்துறை வளர்ச்சி இதனை சாத்தியமாக்குமா என்பதை வரவிருக்கும் நாட்களில் எதிர்பார்ப்போம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை