வங்கிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் – ஸ்டேட் வங்கி சேர்மன்
Banks have to exit Jet Airways in the next two months – SBI Chairman
1949ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் திரு.நரேஷ் கோயல். தனது சிறு வயதிலே தந்தையை இழந்ததும், குடும்பத்தில் நிலவிய பொருளாதார சிக்கல்களால் தனது தாயாரின் மாமா வீட்டில் கல்வியை தொடங்கினார் நரேஷ். அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பை முடித்த இவர் 1967ம் ஆண்டு தனது உறவினர் ஒருவரின் பயண நிறுவனத்தில்(Travel Agency) காசாளராக பணிபுரிந்தார்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பின்னர் விமானத்துறை சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணி வாழ்க்கையை தொடங்கிய அவர் பல பொறுப்புகளை வகித்தார். 1975ம் வருடம் பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ்(Philippines Airline) நிறுவனத்தில் பிராந்திய மேலாளராக பதவி வகித்த நரேஷ் கோயல் 1993ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் என்ற நிறுவனத்தையும், அதன் விமான சேவையையும் துவங்கினார். தனது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பத்து வருட காலம் பணிபுரிந்த அனிதா என்ற பெண்மணியை மணந்தார்.
விமான துறை சார்ந்த சேவைகளுக்கு பல விருதுகளை வாங்கிய இவர், 1990ம் காலகட்டங்களில் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டார். 25 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நிதி சிக்கலில் மாட்டி கொண்டது. வங்கிகளில் வாங்கிய கடனை(Debt) திரும்ப செலுத்த முடியாமலும், விமான சேவையை தொடர முடியாமலும் திணறியது.
ஜெட் ஏர்வேஸ்(Jet Airways) விமான நிறுவனத்தில் 22,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சமீபத்தில் இயக்குனர் குழுவில் இருந்தும், சேர்மன் பதவியிலிருந்தும் நரேஷ் கோயல் விலக வேண்டும் என முதலீட்டாளர்கள் மற்றும் கடன் அளித்த வங்கிகள் அழுத்தம் கொடுத்தது. இதனையடுத்து நேற்று(25-03-2019) நரேஷ் கோயல்(Naresh Goyal) மற்றும் அவரது மனைவி அனிதா கோயல்(Anita) தங்களது பதவியிலிருந்து விலகினர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ஏற்கனவே அபுதாபி நாட்டின் எதிஹாட் விமான நிறுவனம்(Etihad Airways) 24 சதவீத பங்குகளை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் பதவி விலகலை அடுத்து, வங்கிகளும் தங்களது கடன் தொகையை மீட்டெடுக்கும் முயற்சியில் முழுவதுமாக இறங்கியுள்ளன. வங்கிகளும் இந்த நிறுவனத்தின் பங்குகளில் குறிப்பிடத்தக்க சதவீதத்தை வைத்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 10,000 கோடி ரூபாய்க்கு மேலான வங்கி கடன்கள் நிலுவையில் உள்ளன.
வங்கிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் என எஸ்.பி.ஐ. சேர்மன் திரு. ரஜனீஷ் குமார்(Rajnish Kumar) தெரிவித்துள்ளார். தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளின் பொறுப்பில் உள்ளன என்றே சொல்லலாம். நிறுவனத்தில் உள்ள கடனை வசூலிப்பதும், பின்னர் அதனிலிருந்து வெளியேறுவதும் தான் வங்கிகளின் நடவடிக்கையாக சொல்லப்படுகின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் விலகியது இந்திய விமானத்துறையில் ஒரு சோகமான நாள் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை