ஒன்பது மாதங்களில் 44 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது – EPFO
44 Lakhs Jobs Created in 9 Months – EPFO
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organization -EPFO) கடந்த வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு சம்மந்தமான ஒரு தகவலை வெளியிட்டது. கடந்த செப்டம்பர் 2017 இலிருந்து 2018 மே மாதம் வரை, ஒன்பது மாதங்களில் நாட்டில் 44 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளது.
2017 செப்டம்பர் – 2018 ஏப்ரல் காலத்தில் வருங்கால வைப்பு நிதி புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 41.26 லட்சமாகும். கடந்த மே மாதத்தில் மட்டும் புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 லட்சமாகும்.
மே மாதத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கையில் 18-21 வயது பிரிவில் மட்டும் 2.50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். 22-25 வயது பிரிவில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை 1.90 லட்சமாகும் என்பது கவனிக்கத்தக்கது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியமைப்பு சுமார் 6 கோடி உறுப்பினர்களையும், 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியையும் நிர்வகிக்கிறது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தங்களது வருமானத்திலிருந்து சேமிக்கின்றனர். ஊழியர்களின் நிறுவனமும், ஊழியர்களின் சார்பில் ஒரு குறிப்பிட்ட சதவீத பங்களிப்பை செலுத்திகிறது.
EPFO அமைப்பின் சார்பில் மூன்று விதமான வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியமைப்பு(EPFO) 1952 ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour and Employment) மற்றும் இந்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது.
மேலே குறிப்பிடப்பட்ட தரவுகள் அந்தந்த மாதத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை என்றும், அவர்களின் பங்களிப்பு அடுத்தடுத்த மாதத்தில் தவறும் பட்சத்தில் தரவுகளின் எண்ணிக்கையிலும் மாறுபாடு இருக்கலாம் என EPFO அமைப்பு கூறியுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை